எதுவும் புரியவில்லை...

சொல்லப்பட்ட மந்திரகோஷங்கள்
எதுவும் புரியவில்லை

ஓரமாய் அமர்ந்து தன் சுய ரசிப்ப்புக்குட்பட்டு
வாசித்துகொண்டிருக்கும் மேளதாளங்களும்
ரசிக்கவாய்க்கவில்லை

பட்டுப்புடவைகள் சர சரக்க வந்து
தெரியுமாவெனக்கேட்டு திகைக்க வைக்கும்
முன்பின் நானறியா உறவுகளும்
ரகசியமாய் சிரித்துப்போகும்
நண்பர்களும் அதிர்வாயிருக்கிறது

எல்லாம் முடிந்து உறவுகளோடு மாறிமாறி
எடுத்துக்கொண்ட புகைப்படத்தில்
ஓரமாய் வந்தமர்ந்த குழந்தை என்ன உறவென்பது
இன்னமும் புரியவில்லை

கல்யாணத்திற்கு வந்து வாழ்த்திய மனைவியின் நண்பர்கள்
முகம் மனதில் பதியவில்லை

எனக்கு உணவு பரிமாறும் நண்பர் சாப்பிட்டிருப்பாரா
தெரியவில்லை
அந்த மேளகோஷ்டி சாப்பிட்டிருக்குமா?

இத்தனைக்குப்பிறகும் இத்திருமணம் யாருக்கேணும்
வருத்தமளிக்குமா?
வந்த எல்லோரும் நேரத்திற்கு
ஊர்போய் சேர்ந்திருப்பார்களா?
கேள்விகளோடே முடிந்தது என் திருமணமும்
நான் கலந்துகொண்ட திருமணங்களும்..


-- ரிஷி சேது - rishi_sethu23@rediffmail.com