முன்குறிப்பு : 


"பள்ளியின் வகுப்பறை
வெறும் மணல் சிமெண்ட் கலவைகளால் 
ஆன கற்கட்டிடம் அல்ல.  
அது  உணர்வுக் கலவைகளால் 
பூசப்பட்ட உயிரோவியம்"

--------------------------

எல்லா வகுப்பறைகளிலும் 
இப்பொழுது 
ஆழ்ந்த அமைதி
சூழ்ந்திருக்கும்

அறையின் சுவர்கள் 
நிசப்த அலைவரிசையில் நின்றிருக்கும்

உற்சாகத்தை நிரப்பி சென்றவர்கள்
தாங்க முடியாத வெறுமையும் 
தந்து விட்டு போயிருக்கிறார்கள்

********************

மழை வரைந்த நீர்க் கோடுகள்...
புழுதி பறந்த முன் திடல்...

டிங் டிங் டிங் எனும்
தண்டவாளத்தத்துண்டின் ஒலி அலைகள்.....

பாதம் பதிந்த இடம்...
பறவை பறந்த தடம்...

பழுப்பு  வளையத்திற்குள்
புவியீர்ப்பு விசையிலிருந்து 
விலகிச்செல்லும் 
தனி ஊசலான மனம்.....

என எண்ணற்ற 
நினைவுப் படிமங்களுடன் 
போராடிக் கொண்டிருந்தேன்

*****************

இந்தப் பூவில்...?
அந்தப் பூவில்....?
இல்லையில்லை அதோ அந்த பூவில்...?

எதிர்பார்த்த எதிலும் 
அமராது
வந்தது போலவே 
பறந்தது பட்டாம்பூச்சி 

----வகுப்பறையில் ஒரு நாள்----

K. சதீஷ்

PVKN higher secondary school ,pongalur

வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு

கிளிநொச்சி அகிலனின் வலைதளத்தை நண்பர் செந்தில்நாதன் எனக்கு பரிந்துரைத்திருந்தார். என் சிறு வயதில் மின்சாரம் இல்லாத இரவுகளில் எங்கள் வீட்டின் ஓட்டு விரிசல்களின் வழியாக தெரியும் நிலவின் அழகை தூக்கம் வரும் வரை பார்த்துக்கொண்டே இருப்பேன். இன்று மாநகரத்தில் நிலவை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. இது தொடர்பான அகிலனின் கவிதையில் ஒன்று........ (அவர் இது கவிதையா என்று சந்தேகம் எழுப்பியிருந்தார். சந்தேகம் இல்லை அகிலன், கவிதைக்கான பத்து விதிகளையும் இது பூர்த்தி செய்கிறது.)

கூரையின்
முகத்தில் அறையும்
மழையைப் பற்றிய
எந்தக் கவலைகளும் அற்றது
புது வீடு
இலைகளை உதிர்த்தும்
காற்றைப் பற்றியும்
இரவில் எங்கோ காடுகளில்
அலறும் துர்ப்பறவையின்
பாடலைப் பற்றியும்
எந்தக்கவலைகளும்
கிடையாது
புது வீட்டில்..
ஆனாலும் என்ன
புது வீட்டின்
பெரிய ஜன்னல்களூடே நுழையும்
நிலவிடம் துளியும் அழகில்லை..

மேலும் தொடர .... http://www.agiilan.com/?p=329

சிநேகிதிகளின் கணவர்கள்

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
எப்போதும் உருவாகிவிடுகிறது
ஒரு சதுரங்கக் கட்டம்

ஒரு கலைக்கமுடியாத பாவனையின்
மர்ம நிழல்

ஒரு சர்க்கஸ் கோமாளியின்
அபாயகரமான சாகசங்கள்

ஒரு அபத்த வெளியில்
விரிக்கப்பட்ட வலை


சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேதிகளின் கண்களை
முற்றாகத் தவிர்த்துவிடுகிறேன்

அவளது ஆடையின் வண்ணங்களை
அவளது தேனீரின் ரகசியப் பிரியங்களை
மறுதலித்துவிடுகிறேன்

அவளைப் பற்றிய ஒரு நினைவை
வேறொரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன்

அவளது கணவனைப்போலவே
அவளது இருப்பை
ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன்


சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகிதங்களில்
நாம் அனுமதிக்கப்படுவது
ஒரு கருணை

அது நம்மிடம் காட்டப்படும்
ஒரு பெருந்தன்மை

சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு
காட்டப்படும் பெருந்தன்மை

நாம் சந்தேதிக்கப்படவில்லை
என நம்மை நம்ப வைக்கும்
ஒரு தந்திரமான விளையாட்டு


சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேகிதி எப்போதும்
பிசாசுகளின் புதிர்மொழியொன்றைப்
பேசுகிறாள்

உரையாடல்களின்
அபாயகரமான திருப்பங்களை
பதற்றத்துடன் லாவகமாகக் கடந்து செல்கிறாள்

எதைப் பற்றிய பேச்சிலும்
கணவரைப் பற்றிய
ஒரு பின்குறிப்பை இணைத்துவிடுகிறாள்

ஒவ்வொரு சந்திப்பின் முடிவில்
மிகவும் ஆயாசமடைந்து
கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது
நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களின் இடையே இருப்பது
ஒரு உறவல்ல
இலக்குகள் ஏதுமற்ற
ஒரு பந்தயம்

ஒரு அன்னியனுக்குக் காட்டும்
வன்மம் மிகுந்த மரியாதை

ஒரு சட்டபூர்வ உரிமையாளனுக்கு எதிராக
ஒரு பொறுக்கியின் ரகசிய கலகம்

தொண்டையில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட
ஒரு மீன் முள்


சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
நான் எனது பழக்கவழக்கங்களை
மாற்றிக் கொள்கிறேன்

அவர்களது எல்லா அக்கறைகளையும்
எனது அக்கறைகளாக்கிக் கொள்கிறேன்

சிநேகிதிகளுடன் பேச
ஒரே ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது

அவர்களின் கணவர்களுடன் பேச
ஏராளமான கச்சாப் பொருள்கள் தேவைப்படுகின்றன


சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
சிநேகிதிக்குப் பதில்
சிநேகிதியின் குழந்தைகளை
நேசிக்கக் கற்றுக் கொண்டேன்

எவ்வளவு குடிக்க வேண்டும்
ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும்
நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும்
எந்தக் கணத்தில் வெளியேற வேண்டும்
என எல்லாவற்றையும் பழகிக் கொண்டேன்

நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று

அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று

ஒரு சிநேகிதியை
‘சிஸ்டர்’ என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று

- மனுஷ்யபுத்திரன்
நன்றி : செந்தில் நாதன், பெங்களூர்.

எதுவும் புரியவில்லை...

சொல்லப்பட்ட மந்திரகோஷங்கள்
எதுவும் புரியவில்லை

ஓரமாய் அமர்ந்து தன் சுய ரசிப்ப்புக்குட்பட்டு
வாசித்துகொண்டிருக்கும் மேளதாளங்களும்
ரசிக்கவாய்க்கவில்லை

பட்டுப்புடவைகள் சர சரக்க வந்து
தெரியுமாவெனக்கேட்டு திகைக்க வைக்கும்
முன்பின் நானறியா உறவுகளும்
ரகசியமாய் சிரித்துப்போகும்
நண்பர்களும் அதிர்வாயிருக்கிறது

எல்லாம் முடிந்து உறவுகளோடு மாறிமாறி
எடுத்துக்கொண்ட புகைப்படத்தில்
ஓரமாய் வந்தமர்ந்த குழந்தை என்ன உறவென்பது
இன்னமும் புரியவில்லை

கல்யாணத்திற்கு வந்து வாழ்த்திய மனைவியின் நண்பர்கள்
முகம் மனதில் பதியவில்லை

எனக்கு உணவு பரிமாறும் நண்பர் சாப்பிட்டிருப்பாரா
தெரியவில்லை
அந்த மேளகோஷ்டி சாப்பிட்டிருக்குமா?

இத்தனைக்குப்பிறகும் இத்திருமணம் யாருக்கேணும்
வருத்தமளிக்குமா?
வந்த எல்லோரும் நேரத்திற்கு
ஊர்போய் சேர்ந்திருப்பார்களா?
கேள்விகளோடே முடிந்தது என் திருமணமும்
நான் கலந்துகொண்ட திருமணங்களும்..


-- ரிஷி சேது - rishi_sethu23@rediffmail.com

என் மனமும் அதனோடே...

தீட்டுக்கு ஒதுங்குவதில்லை
என் வீட்டில் குடியிருக்கும்
சிட்டுக்குருவிகள்...

வண்ணத்துப் பூச்சிகளின்
இறக்கைகளுக்குள் குடியேறிவிடுகிறது
அவ்வப்போது மனது...

என்ன தைரியம்
மின் கம்பியில் வரிசையாய் அமர்ந்திருக்கும்
சிறு பறவைகள்...

வீரியமழைக்கு ஒரு பாடல்
மென் தூரலுக்கொரு பாடல்
குளிர் காற்றுக்கென்றொன்றாய்
விதவிதமாய் வெளியெங்கும்
நிறைத்துப்போகும் வெண் நாரைகளுக்கு
ராகங்கள் சுரங்கள் கட்டுப்படுகின்றன...

கொட்டிக்கிடக்கும் இலைச்சருகுகளுக்கிடையே
ஊர்ந்துபோகும் நீள் பாம்பிற்கு
இரையாகிவிடலாமென்ற எச்சரிக்கையோடே
பதுங்குகிறது வெள்ளெலி ..
என் மனமும் அதனோடே...


-- ரிஷி சேது - rishi_sethu23@rediffmail.com

ரத்தத்தின் சுவை

போர் பற்றிய
மிக சமீபத்திய
செய்திக்காகக்
காத்திருக்கிறேன்

என் வான்வெளியில் அல்ல
விமானங்கள் சீறுவது
என் தெருவில் அல்ல
குண்டுகள் விழுவது
நொறுங்கித் தரைமட்டமாவது
என் வீடுமல்ல

அகண்ட இப்பிரபஞ்ஞத்தில்
கவனமாய்க் கறாராய்
வகுக்கப்பட்ட
எல்லைகளினுள்
அபாயங்களுக்குத் தப்பி
அரண் கொண்டிருக்கிறது
என் இருப்பு
என் கோப்பைத் தேநீருடன்
என் இருக்கையில்
ஓய்வாய் அமர்ந்து
தினசரியின் ஒரு வரியை
சாதாரணமாய்க் கடந்து விடுகிறேன்

அவ்வரியில் குண்டடிபட்டு
சில நூறுபேர்
இறந்திருக்கிறார்கள்
எந்த நியாயமுமின்றி
ஒரு குழந்தை தகப்பனையோ
சிசுவொன்று முலையூட்டும் தாயையோ
இழந்துவிட்டிருக்கிறது

யாரோ ஒருவர்
சகோதரனையோ
கணவனையோ
பிள்ளையையோ
இழந்து கதறுகிறார்

நாடகமென போர் நிகழும்
ஊடகங்களின்
அபிமான ரசிகன் நான்

மயக்கும் வண்ணத்திலும்
வாசனையிலும்
பெருகி வழிகின்றன
போர்ச் செய்திகள்

சிதறும் தசையும்
ஒழுகும் ரத்தமும்
இடையறாது ஆர்வமூட்ட
அடுத்த அங்கம் எதுவோயென
ஆவல் கொள்கிறேன்

மரவள்ளிக் கிழங்குகளைத்
தோண்டியெடுப்பது போல்
மண்ணிலிருந்து தன் குழந்தைகளின்
உடல்களைத் தோண்டியெடுக்கிறான்
ஒருவன்

தன் அம்மண மேனியில்
குண்டு சிதறிய காயங்களோடு
அழுதுகொண்டிருக்கிறது
ஒரு குழந்தை

போர்ச்சிதிலங்கள் மீது
விளையாடுகின்றனர்
இன்றைய தினத்துக்குத்
தப்பிவிட்ட சிறுவர்கள்

குண்டுகளை விசிறிச் செல்கிறது விமானம்
புகையெழும்பி மூடுகிறது
தொலைக்காட்சித் திரையை

இன்று கொல்லப்பட்டவர்கள்
எண்ணிக்கையைச் சொல்லி
செய்தி வாசிப்பவன் முடிக்கையில்
என் கடைசி மிடறு
தேநீரை உறிஞ்சுகிறேன்

இனிப்பாயும் இருக்கிறது
ரத்தத்தின் சுவை

(‘பிஷப்புகளின் ராணி’ தொகுப்பிலிருந்து)

இயலாமையின் தொலைவிலிருந்தபடி,
போரால் இன்னலுறும் எம் ஈழத் தமிழ்ச் சோதரர்களுக்கு....

ம‌ன‌ ந‌ல ம‌ருத்துவ‌ர் முன் நான்..

அழைத்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் சொன்ன‌தோ
ஆயிர‌ம் கார‌ண‌ங்க‌ள்


பிச்சைக்கார‌னுக்கு ஐம்ப‌து ரூபாய்
போட்ட‌தைச் சொன்னார் ஒருவ‌ர்


நாய்க் குட்டி இற‌ந்த‌ சேதி கேட்டு
விமான‌ ப‌ய‌ண‌த்தை ர‌த்து செய்ததைச்
சொன்ன‌து இன்னொரு ந‌ண்ப‌ன்


ம‌க‌னின் தேர்ச்சி அட்டையில்
'தேர்வு என்ப‌தே முட்டாள்த‌ன‌மான‌ ஒன்று'
என்று கையொப்ப‌மிட்ட‌தைச்
சொல்லி வ‌ருந்தினாள் ம‌னைவி


என‌க்கோ வேறு க‌வ‌லை
மீன்களை‌ அடைத்து வைத்திருக்கும்
இந்த‌ மேசை மீன்தொட்டியை எப்ப‌டி உடைப்ப‌து?

தி.அய்ய‌ப்ப‌ன் ( ந‌ன்றி : ஆன‌ந்த‌ விக‌ட‌ன் )

யார்?

நேற்று யதேச்சையாக சமையல் அறையில் நுழைந்த போது அங்குள்ள பொருட்களை நோட்டமிட்டேன். எவ்வளவு சொகுசாக நாம் வீட்டில் சாப்பிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து பார்க்கும் போது ஈழ மக்களின் இடம் பெயரும் காட்சி கண்களில் இரத்தம் வரவழைக்கிறது.

எல்லாவற்றையும் இழந்து எந்த ஒன்றின் உந்துதலால், இடைவிடாத போராட்டத்தை இவர்கள் நடத்துகிறார்கள். உலகம் முழுதும் தடை, உணவு இல்லை, மருந்து இல்லை. எனினும் இயக்கம் தான் எல்லாம் இறுதி இலட்சியம் வேறெதுவும் இல்லை என்கிறார்கள். மனித வெடிகுண்டாய் வெடித்துச் சிதறுகிறார்கள்.

பலர் பிரபாகரனை ஆதரிக்கிறார்கள் அதேபோல் எதிர்ப்பவர்களும் சம அளவில் இருக்கிறார்கள். முழுக்க எதிரிகளால் சூழப்பட்ட அந்த மனிதனின் எண்ண ஓட்டம் எண்ணவாக இருக்கும் இந்த கணத்தில். எண்னிப் பார்க்க பார்க்க இரவு தூக்கம் வர நெடு நேரமாகிறது.

மாலையில் பார்க்கில் ஜோடி ஜோடியாக இருப்பவர்களை பார்த்துக் கொண்டே வாக்கிங் சென்றபோது ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதை எறிகணையாய் நெஞ்சில் பாய்கிறது.


ஏன் எம் வாழ்வில் இத்தனை சுமைகள்
ஏன் எம் பாதையில் இத்தனை இருட்டு

குட்டப்பட்டு
தலைகுனிந்த அகதிகளாக
ஏன் எம் நெஞ்சில் இவ்விதம் நெருப்பு

பூவார் வசந்த
மரங்களின் மறைப்பில்
காதற் பெண்களின் தாவணி விலக்கி
அபினிமலர்களின் மொட்டைச் சுவைக்கும்
இளம் பருவத்தில்
'இடுகாட்டு மண்ணைச் சுவை' என எமது
இளையவருக்கு விதித்தவன் யாரோ?

உன் விரல் பிடித்துக் கொள்கிறேன்

உன் விரல் பிடித்துக் கொள்கிறேன்
அனிச்சையாய் ..
இருள் படர
ஆயத்தமாகும் பொழுது

வகைபிரிக்க முடியாத உணர்வு
இருட்டில் பயணிப்பதென்பது
பயமாகவும் இருக்கலாம்
தைரியக்குறைவாகவும் இருக்கலாம்
ஆராய விருப்பமில்லாது
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்

உறுதியளிக்க முடியாது தான்
உன் பாதைகளின் தன்மை குறித்து
இருளைக் காட்டிலும்
மோசமான தாக்கத்தை
நீ என்னில் ஏற்படுத்தலாம்
எனினும் உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்

என்னென்னவோ காரணங்களை
எனக்கு நானே கற்பித்துக் கொண்டு
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
இருட்டிலே
கொஞ்சம் கொஞ்சமாய்
என் சுயத்தின் சிதைவுகள் தென்படக்கூடும் ..

-ந. லக்ஷ்மி சாகம்பரி

ஒரு அன்பரின் மின் மடல் வினவல்

நண்பர் சதீஸ் அவர்களுக்கு,உங்களது பதிவில் அறிமுகம் பகுதியில் இருந்து DRCET பற்றிய குறிப்பை எனது பதிவில் வெளியிட உங்களது அனுமதி தேவை.
அன்புடன்
வேளராசி.

எனது பதில் :

தாராளமாக நண்பரே.... எடுத்துக் கொள்ளுங்கள்.

உலகையே தன் வீரத்துக்கு அடிமையாக்கின மாவீரன் அலெக்சாண்டருக்கு 33 வயதிலேயே முடிவு வந்தது. தன் வாழ்வின் இறுதிக் கட்டம் என்று புரிந்து கொண்ட அந்த மாமன்னன் சொன்னான்  " நகர வீதிகளில் என் பிணத்தை சவப்பெட்டியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது பெட்டியை மூடாமல் என் இரண்டு கைகளையும் விரித்து வைத்த நிலையில் எடுத்துச் செல்லுங்கள். உலகம் முழுவதையும் வெற்றி கொண்ட இந்த அலெக்சாண்டர், போகும்போது தன்னோடு எதையும் கொண்டு போகவில்லை என்பதை உலக மக்கள் புரிந்து கொள்ளட்டும்" என்று சொல்லியிருக்கிறார்.

ஒரு சித்தரின் கூற்றுப்படி, நம்மை தொடரப் போவது இதுதான்...

அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியும் பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடர்வது இருவினை புண்ணிய பாவமே.


‘தன் பெண்டு, தன் பிள்ளை, தன் சோறு, தன் வீடு, தன் சம்பாத்தியம், இவையுண்டு, தானுண்டு என்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன்' என்று சமுதாயத்தின் பெரும்பாலோர் இருக்க, பொது வாழ்விற்கு நம்பிக்கை அளிக்கிறார்கள் ஆனந்த் பிரசாத்தும் கிருஷ்ணப்பிரியாவும், அவர்களின் சில நண்பர்களும்..
-----------------------------------------------------------------------
Contact:
P.Ananth Prasath - Email : ananthprasath@drcet.org Phone : +91-97313 22008
M.Krishna Priya - Email : priyarajeswari@gmail.com Phone: +91-98809 60332
URL : http://www.drcet.org/