Showing posts with label குறுங்கவிதைகள். Show all posts
Showing posts with label குறுங்கவிதைகள். Show all posts

பிரிவின் சாசனம்...!

ஏதாவது சொல் என்றேன்
என்ன சொல்ல என்றாய்?
எதையாவது சொல்லி
இருக்கலாம் நீ.

பிரிவின் சாசனமாய்
ஒரு பதிலாவது
எஞ்சியிருக்கும்
நமக்குள்.


-செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி

அஞ்சு கவிதைகள்

நுட்ப இழைகளால் ஆன
நெகிழ்ந்த மனசுக்கு
எப்படி சாத்தியமாயிற்று
துளிர வைக்கவும்
வெட்டி எறியவும்


முலைக்காம்பைத்தேடி
வாய் குவித்துத் தடுமாறும்
கண் திறக்காத நாய்க்குட்டிகளை
பிரித்துப் போடும் மனமா உனக்கு

எல்லாவற்றையும் உணர முடிகற உன்னால்
என்னை எப்படி உணர முடியாமல் போனது


விதியின் விளிம்பில்
நிறுத்திச் சிரிக்குது வாழ்க்கை
நீயென்ன செய்வாய்
பாவம்

கிணற்று நீரை
வெள்ளம் கொண்டு போகாதெனினும்
பூமியை பற்றித்தான்
பயமெனக்கு

---ரவி சுப்பிரமணியன் -

ஹைக்கூ

தண்டவாளத்தில்
தலை சாய்த்து பூத்திருக்கும்
ஒற்றைப் பூ
என் காதல்.
நீ நடந்து வருகிறாயா
ரயிலில் வருகிறாயா?


* * * *

உன் காதலை நான்
இழந்து விட்டேன்தான்
ஆனால், இந்த உலகத்தில்
யார்தான்
எதைத்தான்
இழக்கவில்லை?


* * * *

இந்த துக்கம்
எனக்கு பிடித்தது
காரணம்
இது
நீ தந்தது.


பழனி பாரதி----

முக்கோணத்தின் மூன்று கோடுகளும் நேர்கோடுகளே..

அடையாளம் தெரியாமல்
ஆற்று மணலில்
ஆயிரம் பாதங்கள்.


குனிந்து நடக்கும் தாத்தா
தொலைத்த வயதைப்
பூமியில் தேடுவார்.


கடைசி வரிசையில்
சோகத்தோடு
சர்க்கஸ் கோமாளியின் மனைவி.


தவம் செய்கின்ற ரிஷி
சலங்கை ஒலிக்காகக்
காத்திருக்கிறார்.


விருந்தாளி பையில் திராட்சை
நீண்ட பேச்சு
உறங்கிப் போன குழந்தை.


-- நா.விஸ்வநாதன்---

ஹைக்கூக்கள்

காலடிபதிவை
கவிதையாக்கிப் போகும்
கொலுசுச் சிணுங்கல்....

-- பிருந்தா - மழை பற்றிய பகிர்தல்கள்


மழையில் நனைய ஆசைதான்
சட்டை பைக்குள்
அவள் கடிதம்

--தங்கம் மூர்த்தி


புரையேறும் போது
நினைத்துக் கொள்வேன்
நீ நினைப்பதாக

-- சிவ பாரதி

ஒற்றை பறவையின்
சிறகசைப்புகளில் குளிராமல்
வெந்து தவிக்கிறதென் காடு

கனவு நிலை உரைத்தல்

ஆரம்ப பிடிமானம்
குறைந்துதான் போய்விட்டது
காலியான
தேநீர்கொப்பையைக்
கீழ்வைக்கையில்!

தாகத்தைப்
புரிந்து கொள்ள முடியவில்லை என்னால்
தண்ணீரளவுக்கு.

எத்தனையோ
பேனா திறப்புகள் மூடப்படுவதுண்டு
எழுதலற்று.

எந்தப்புள்ளியில்
தொடங்கி முடித்து வைக்கப்பட்டிருக்குமோ
தெரியவில்லை
இந்தக் கோலம்.

ஆந்திரா வரை சென்றழியும்
புழுதி படிந்த லாரியில்
என் பெயர்.

தென்னையும் பனையும்
கள் சுரந்து எதிர்க்கிறது
காந்தியை.

--இரவி

உன் பெயரை!

நடைபாதைக் கடையில்...
லாரிகளின் முகப்பில்........
பேருந்துப் பயணத்தில்.....
திருமண அழைப்பிதழில்...
சுவற்றுக் கிறுக்கல்களில்...
யாரோ அழைக்கையில்...
எதிர்பாராத விதமாய்
சந்திக்க நேர்ந்து விடுகிறது...

உன் பெயரை!

கோயில்

செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது
அழுக்கு.

-காசியானந்தன் - நறுக்குகள்

தனிமை

உன் புன்னகையை
சுமந்து பழகிய‌
மனதிற்கு
கடினமாகத்தான்
இருக்கிறது
உன் நினைவுகளை
சும‌ப்ப‌த‌ற்கு!


---எழில் பாரதி