தனிமையின் பெயர்

உறக்கம் வரா ஆம்ஸ்டர்டாம் இரவு 11.30 மணி.
ஏதோ பேசித்தீர்க்க விழையும் மனம்.

பெல்ஜியம், ஜெர்மனி, லக்சம்பர்க், பிரான்ஸ்..
”இத எல்லாம் நாங்க TVல தான் பார்க்கணும்..நீ நேர்லயே பார்க்கிற..” - அப்பா.
“எந்த TVயும் உங்கள காட்டுதில்லையே..” - நான்.

சின்ன வயசுல உலகம் பார்ப்பது சாதனையாம்.
ஹ்ம்ம்..
பறவை கூட தான் நாடு விட்டு நாடு போகிறது - சாதனையா என்ன?
இது சாதனை இல்லை.
பிழைப்பு !

நினைத்தவுடன் பார்க்க வலைப்படக் கருவி உண்டு.
நினைத்தவுடன் பேச தொலைப்பேசி உண்டு.
அக்கா மகனை தூக்கிக் கொஞ்சத் தான் தொழில்நுட்பம் இல்லை.

மீந்த பருக்கைகள் தின்ன வரும் குருவிகளுக்கு என் மொழி தெரியாது.
வாரக் கடைசி நண்பர்களுக்கு என் வலி புரியாது.
மது விற்கும் இரவுக்கடைக்காரனுக்கு சிரிக்கத் தெரியாது.

என் கண்ணாடி ஜன்னலை திறந்து வைக்கையில்
காற்றும் மாசும் இரைச்சலும் எப்போதும் வந்தாலும்
ஒருபோதும் வருவதில்லை ஒரு பறவையும்..

திருமணம் செய்யலாமா, புது நண்பர் பிடிக்கலாமா - அக்கறையோடு கேட்கும் அக்கா.
ஒரு container நிறைய என்னோடு மனிதர்களை போட்டு அடைத்தால் சரியாகி விடுமா என்ன?
இது வெட்ட வெளியில் ஒரு மூச்சுத் திணறல்.

வருகிறார்கள். நுழைகிறார்கள். திரை மூடுகிறது. திரை விலகுகிறது. செல்கிறார்கள்.
20 நிமிடங்கள் - 50 யூரோ மட்டுமே.
”என்ன செய்யலாம்?”
”என்ன வேண்டுமானாலும்..

ஏதாவது பேசுவாயா என்றா கேட்க முடியும்?
நகர்கிறேன்.

குளிர் நாட்டில் நடுநிசி நாய்களை காணோம்.
மனிதர்கள், வாகனங்கள், கடைகள் மட்டுமே.

இன்னொரு சன்னல். இன்னொரு பெண்.
அதே உரையாடல்.
நகரப் பார்த்தபோது கேட்டாள்:

”யாரும் வருகிற பாட்டை காணோம்..விடியல் வரை கண் முழிக்கணும்..
சும்மானாச்சும் கொஞ்ச நேரம் ஏதாச்சும் பேசேன்”?

என்ன பேசி விட முடியும்?

போதை, புகை, மாது, கேளிக்கை, கொண்டாட்டம் நிறைய கிடைக்கும்.
காசு இருந்தால் எதையும் வாங்கலாம்.
வாழ்க்கை மட்டுமே விற்பனைக்கு கிடைப்பதில்லை.

லைடன் கிளம்பத் தொடர்வண்டி வரும் நேரம் நள்ளிரவு 01.15 மணி.
அலைந்த களைப்பில் உறக்கம் வரலாம்.
அப்போதும் யாரும் வரப்போவதில்லை பேசித் தீர்க்க -
எனக்கும் அவளுக்கும் அனைவருக்கும்.


- அன்புடன், ரவி
http://blog.ravidreams.net/